Monday, July 16, 2007

ஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம்


ஸ்ரீ அரச கேசரி
சிவன் ஆலயம்

அரச கேசரி சிவன் என்னும் தொடர் அரச
கேசரி சிவன் என்றாகியது.

அரசு என்பது அரசன், அரச மரம் என்னும் இரு பொருளை குறிக்கும்.
கேசரி என்பது சிங்கத்தைக் குறிக்கும். இந்த இரண்டு சொற்களும் சிவன்
என்னும் சொல்லுக்கு அடைமொழிகளாக இந்தத் தொடரில் இடம் பெறுகிறது.

நாட்டை ஆளும் அரசனைக் கடவுளாக கருதும் மரபு நம்மிடம் இருந்தது.
''திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனே'’
என்று நம்மாழ்வார் அரசனை விஷ்ணுவாகப் பார்க்கிறார்.
அதேபோல் சிவபெருமானையும் மாணிக்கவாசகர் அழைக்கிறார்.
'’ உத்தரகோச மங்கைக்கு அரசே'’ என்றும்

'’ ஆடக மதுரை அரசே போற்றி '’ என்றும்
''திருபெருந்துறை மன்னா'’ என்றும் அழைக்கிறார்.
மேலும் திருத்தசாங்கம் என்னும் தலைப்பில் சிவபெருமானை அரசனாகக்
கருதி அவனுக்குரிய பேர், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு,
மாலை, கொடி ஆகிய பத்து உறுப்புகளை அவரே சுட்டுப் பாடுகிறார்.

திருவிளையாடல் புராணம் சிவபெருமான் அரசனாக வந்த வரலாற்றை
மீனாட்சி திருமணப் படலத்தில் நன்கு விளக்குகிறது.

'’ அத்ரிவிடைக் கொடி அங் கயற்கொடி யாக
அராக்கலன் பொற்கலன் ஆக
பொதியவிழ் கடுக்கை வேம்பலர் ஆகப்
புலியதள் பொலந்துகில் ஆக
மதிகுடி வைர மணிமுடி ஆக
மறைகிடந்து அலம்புமா மதுரைப்
பதியுறை சோம சுந்தரக் கடவுள்
பாண்டியனாகி வீற்றிருந்தான்
எனக் கூறுகிறது.

அரசு என்பது அரச மரத்தைக் குறிக்கும். அரசு எல்லா மரங்களுக்கும் தலைமையானது.
அதுபோல் எல்லாத் தெய்வங்களுக்கும் தலைமையானவர் சிவன்.திருமணத்தின் போது
அரசாணிக்கால் நடுவதும் அரசன் ஆணை முன்னர் - சிவன் ஆணை முன்னர் பெறுவதாகும்.

அரசு தல விருட்சமாகப் பல திருக்கோயில்களில் இடம் பெற்றிருப்பதை நாம் காண்கிறோம். அரசு மரத்துக்குப் போதிமரம் என்றொரு பெயரும் உண்டு. புத்தர் பிரான் ஞானம் பெற்ற இடம் போதி மரம். எனவே அரச மரம் ஞானத்தின் சொருபம்.

சிவபெருமானைச் சிங்கமாக அதாவது 'கேசரி'யாகத் திருநாவுக்கரசர் '’
எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ ''எனும் தம் திருப்புகலூர்த்
தேவாரப் பதிகத்தில் அழைக்கிறார். '’ சங்கை ஒன்று இன்றியே
தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவாச் சிங்கமே
உன்ணடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய தேவே'’ எனும் அடிகள் இப்பதிகத்தின் இரண்டாம் பாடலில் இடம் பெறுகின்றன.
இப்பதிகம் திருநாவுக்கரசர் திருவடி முக்தி அடைந்தபோது பாடியது.
அவர் பாடிய கடைசிப் பதிகம். எனவே திருப்புகலூரில் இவ்விழாவின்
போது சிவலிங்கத்திற்குச் சிங்க வடிவில் அலங்காரம் செய்வார்களாம்.

[நன்றி :- பேராசிரியர் திரு. சுப. திண்ணப்பன் அய்யா அவர்களுக்கு.
'அரசகேசரி சிவன்' செய்தி குறிப்பு]


விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று நரசிம்மாவதாரம்.
அப்போது இரண்யணைக் கொன்ற நரசிம்ம மூர்த்தி தருக்கி அட்டகாசம் செய்யக் கண்ட பிரமன் சிவபெருமானைத் துதிக்கச் சிவன் சரப மூர்த்தி உருக்கொண்டு நரசிங்கத்தின் தோலை உரித்து உடுத்திக் கொண்டதாக ஒரு புராணச் செய்தி உண்டு.

சரப மூர்த்தி உரு எட்டுக் காலகளையும், இரு தலைகளையும் கொண்ட மிருகப் பறவை உருவம் என்றும் இதற்கு இரண்டு சிங்க முகங்களும் இரண்டு பக்கச் சிறகுகளும் உண்டு என்றும் கூறுவர். சிங்கத்தின் உடலுடனும் எட்டுக் கால்களுடனும் கூடிய பறவை என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது. சரப மூர்த்தி உருவும் சிவனைச் சிங்கமாக காட்டுகிறது.

சிங்கப்பூர் வடக்கு வாசலில் உட்லண்ட்ஸ் சாலையில் அரச மரத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டு காவல் அரண் போல வீற்றிருந்த ஸ்ரீ அரச்கேசரி சிவன் ஆலயம் எண்பது ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம். சிங்கப்பூரில் தீர்த்தக் குளம் உள்ள ஓரே ஆலயமென பெருமை பெற்றது.

மக்கள் இறை நினைவுடன் நன்றாக இருக்க என்பதற்காக வழிபாட்டுத் தலங்களை இனமாக நிலங்களை தானமாகக் கோயிலுக்கு எழுதிவைத்தார்கள். அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஓரு கோவில்களில் ஸ்ரீ அரச்கேசரி சிவன் கோயிலும் ஒன்றாகும். மலேசியா - ஜோகூர்பாருவைச் சேர்ந்த பக்தர் திரு.கதிரேசு இவ்வாலயம்
அமைந்திருந்த 76,000 சதுர அடியுள்ள தன் நிலத்தை எந்த நிபந்தைனையுமின்றி அன்பளிப்பாக கொடுத்தார்.
சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த
பக்தர் அன்பர்கள் இவ்வாலயத்தை பராமரித்தும்,
பூஜித்தும், ஆதரவும் தந்துதுள்ளார்கள்.

நாட்டின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு வழி விடுவதற்காக 1995-ஆம் ஆண்டில் புதிய இடத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்றுப்பட்டது. அப்போதிருந்த பொருளியல் வீழ்ச்சி நிலவிய சூழலில் புத்தம் புதிதாக ஒரு கோயிலை அறிமுகமில்லாத இடத்தில் உருவாக்க இயலுமா என்பது மற்றோர் அச்சம். ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் பழக்கமான இடத்தில் செயல்பட்டு வந்த ஆலயம் எவரும் அதிகம்
அறிமுகமில்லாத சுங்கை காடூட் என்னும் தொழில் பேட்டையை
அரசாங்கம் சுட்டிக்காட்டியது

மலேசியாவை நோக்கி செல்லும் இரயில் தண்டவாளத்திற்கும், அகன்ற தண்ணீர் ஓடும் வடிகாலுக்கு நடுவில் ஒரு ஒடுக்கமான இடத்தில் புதிய ஆலயத்திற்காக நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலத்தின் நுனிப்பகுதிக்குச் செல்வதற்கு ஒரு பாலம் மட்டும் இருந்தது.

மேலும் புதிய இடமாகையால் பக்தர்கள் அங்கு வருவார்களா என்ற ஐயம் எழுந்தது. வாகன வசதி இல்லாதவர்கள் பேரூந்து போன்ற பொது வாகன வசதியைதான் நாடுவார்கள். புதிய இடத்தில் பொது வாகன போக்குவரவு மிக குறைவு. ஆகையால் ஆலய செல்ல எண்ணும் பக்தர் கூட்டம் வருமா என்ற கவலை விஞ்சி நின்றது.

இத்துணை தடைகளும், தடங்களும் இருந்த போதிலும் தடைக்கற்களையே படிக்கற்களாக, முன்னேற்றபடியாக மாற்றி ஒரு கலை நயமிகுந்த கோயிலாக மாறியது.கோயிலுக்கு முன்புறமுள்ள வாய்க்காலை கார் நிறுத்துமிடமாக மாற்றி, கோயிலுக்கு பின்புறமிருந்த மலேயன் இரயில்வேக்கு சொந்தமான 20 ஆயிரம்
சதுர அடி நிலத்தில் ஓர் அழகிய பூந் தோட்டத்தையும்
அமைத்துள்ளார்கள்.

இயற்கை சூழ்நிலையில், அமைதியான வளாகத்தில் வரும் பக்தர் மன
மகிழ்ச்சியை அளிக்கும்,கவரும் அற்புதமான கலைப்படைப்புகளைக் கொண்ட ஆலயம் தற்போது திகழ்ந்து வருகிறது.

எழிழார் இராசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழிலேற்றைக்
குழலார் கோதை வரை மார்பின் குற்றாலத்து எம் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை,
அழலார் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே

இராச சிங்கமாகிய அரச கேசரி சிவபெருமானை வணங்கி நாம் நம் பாவங்களை போக்கிக் கொள்வோம்.

ஆலய முகவரி:-
SRI ARASAKESARI SIVAN KOVIL,
25, Sungei Kadut Av,
Singapore. 729679
Tel. 67699902,/Fax.63684283

No comments: